Google

Wednesday, 17 June 2009

பசங்க

"பசங்க" படம் பலரின் இப்போதைய அபிமான திரைப்படம் ஆகிவிட்டது அனைவரும் அறிந்த விஷயம். பலரின் பள்ளிப் பருவத்தை அவர்களது கண்முன்னால் மீண்டும் கொண்டு வந்து நிறுத்திய பெருமை இப்படத்திற்கு நிச்சயம் உண்டு. இப்படத்தை பார்த்தபொழுது, பல விஷயங்கள் எனது நினைவில் வந்து சென்றன.

லீடர் தேர்ந்து எடுக்கும்பொழுது, பக்கடா ஜீவாவிற்கு இரண்டு கைகளையும் தூக்கி கள்ள ஓட்டு போடுவது.

சைக்கிள் இல்லாதவர்கள் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது (நாங்க பஸ் லாரியெல்லாம் கூட ஓட்டுனோம் ! நண்பன் ஒருவன் விமானம் ஓட்ட ட்ரை பண்ணி கை உடஞ்சதால் நாங்க ட்ரை பண்ணல. (ஒரு உயரமான இடத்திலிருந்து குதிச்சுட்டான். கேட்டா ஏரோ ப்ளேன் ஒட்டுனேங்கறான்).

அடுத்தவன் அத்த பொண்ண கரெக்ட் பண்றது !!! (நான் இல்லீங்கோ)

மற்றவர்களுக்கு கேட்கும்படி சத்தமாக படிப்பது. (படிக்கறதா ? அப்படின்னா ?)

சமயம் பார்த்து எதிரிய போட்டுகொடுக்கறது... எதிரிக்கு போட்டுகுடுத்தவனோட ஆளு ஹெல்ப் பண்ணி பொகையா கெளப்புனது !!

சிறுவர்களுக்கு இடையில் சில நேரம் சண்டை வந்து கொண்டே இருக்கும். சில பள்ளிகளில் தனியாக சண்டையிடுவார்கள். சிலர் க்ரூப்பா சண்டை போடுவாங்க ! ( நான் ரெண்டும் செஞ்சுருக்கேன் அப்படிங்கறீங்களா ? )

நான் ஐந்தாவது படிக்கும்பொழுது நடந்த ஒரு க்ரூப் சண்டை இது. மொத்தம் ரெண்டு க்ரூப் இருந்துச்சு. எதுக்கு சண்டை வருதுன்னு யாருக்கும் தெரியாது. ஒருத்தன அடிச்சுட்டா அவன் க்ரூப் அடிச்சவன தேட ஆரம்பிக்கும். சில சமயம் க்ரூப் லீடர்ஸ் மட்டும் சண்டை போடுவாங்க. ஒரு லீடர் பேரு ஹரி (கட்டதுரை) இன்னொரு லீடர் பேரு ராஜேஷ்(கைப்புள்ள). வழக்கம் போல நம்ம கைப்புள்ளயோட ஆள (பூச்சிபாண்டி -ரவி) கட்டதுரையோட ஆளுங்க கைமா பண்ணிட்டன்னுங்க.

அதைப்பார்த்த கைப்புள்ளயோட இன்னொரு ஆளு நம்ம கைபுள்ளகிட்ட ஓடிவந்து " தல தல நம்ம பூச்சிபாண்டிய போட்டு கட்டதுரையோட ஆளுங்க அடிச்சுட்டு இருக்காங்க தல " அப்படின்னு சொன்னான்

கைப்புள்ள : "கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல. நம்மளோட வெளாடரதே அவனுக்கு வேலையா போச்சு" அப்படின்னு டயலாக் பேசாம, சண்ட நடந்த எடத்துக்கு அவனோட லாரில(அதுதான் எங்கயும் நிக்காம போகுமாம் !!) கெளம்பிட்டான்.வடிவேலு மாதிரி இல்லாம, நம்ம கைப்புள்ள கட்டதுரையோட ஆள நொங்கு எடுத்துட்டான். அந்த பையனோட மூஞ்சியெல்லாம் வீங்கிருச்சு. எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனா அந்த அடிவாங்குனவன் வீட்டுக்கு போய் அவனோட அம்மாவ ஸ்கூலுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான். அவுங்க கம்ப்ளைன்ட் செஞ்சுட்டாங்க.

ஹெட்மாஸ்டர் எங்க க்ளாஸ்க்கு வந்து எல்லா பசங்களையும் நீல்டவ்ன்(முட்டிக்கால்) போட வச்சுட்டாரு. அப்படியே ரெண்டு க்ரூப்பும் மொறைச்சுக்கிட்டே வெயில்ல முட்டிக்கால் போட்டோம். "ஈவினிங் நீ காலிடா" அப்படின்னு ஒவ்வொருத்தனும் சொல்லிக்கிட்டு இருந்தானுங்க. ஒரு அரை மணி நேரம் இருந்துருப்போம். அப்புறம் "இப்படி மறுபடியும் செய்யக்கூடாது" அப்படின்னு சொல்லி எல்லாத்தையும் விட்டுடாங்க.

ஒருவாரத்துல மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. இந்த தடவ கட்டதுரையும் கைப்புள்ளயும் அடிச்சுகிட்டாங்க. மறுபடியும் பனிஷ்மென்ட். மறுபடியும் மன்னிப்பு. ஐந்தாவது முழுவதும் இது தொடர்ந்தது.

அந்த வருடமும் முடிந்ததது. அனைவரும் ஆறாவது சென்றோம். கட்டதுரையும் கைப்புள்ளையும் ஸ்கூல் மாறியிருந்தார்கள். இருவரும் மீண்டும் ஒரே ஸ்கூல் ஒரே கிளாஸ்.. அங்கும் இரண்டு க்ரூப்பா ? அப்படீன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. எனக்கு நிஜமா தெரியலங்க.

ஆனா எங்க ஸ்கூல்ல படிக்கற செட், படிக்காத செட் அப்படின்னு புதிதாக ரெண்டு சேவிங் செட்டுகள் உருவாகி இருந்தன. இதில் ஹைலைட் என்னவென்றால் மாணவிகளும் இதில் அடக்கம். :-)

இப்படி பல விஷயங்கள்... அனைத்தும் பசுமையான நினைவுகள்...

நீங்களும் உங்களது நினைவுகளைச் சொல்லுங்கள் ....