நாடோடி இலக்கியன் அவர்களின் கணித பாடமும் கிராமப்புற மாணவர்களும் படிக்கும்போது, எனது பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் திரு. திரிலோகச்சந்திரன் அவர்களும் அறிவியல் ஆசிரியர் திரு.கதிரொளி அவர்களும் எனது நினைவில் மீண்டும் வந்து சென்றனர். அவர்களும் நாடோடி இலக்கியனின் நண்பர் (நாடோடி இலக்கியனாக கூட இருக்கலாம்) போல அனைத்து மாணவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்கள்.
இப்பதிவு எனது கணித ஆசிரியர் வகுப்பில் எனக்கு நடந்த பூஜை (அதாங்க அடி வாங்குனது) பற்றியது. நான் அந்த பள்ளியில் சில காரணங்களால், காலாண்டுத் தேர்வுக்கு சுமார் பத்து நாட்கள் முன்புதான் சேர்ந்து இருந்தேன். அப்போதே பெரும்பாலான பாடங்களின் சிலபஸ் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தன. கோடை விடுமுறையின் போதே ஆரம்பித்துவிட்டார்களாம். எனது பழைய பள்ளியிலும் கோடை விடுமுறையில் பாடங்கள் நடத்தினார்கள். ஆனால் நான் ஒரே ஒரு கணித வகுப்பிற்கு மட்டும்தான் சென்றேன். நண்பர்களுடனான ஊர் சுற்றலிலும் கிரிக்கெட் மற்றும் நீச்சல் பழகுவதிலும் எனது அந்த கோடை விடுமுறை காலியாகி இருந்தது.
ஆகையால் நான் நிறைய படிக்க வேண்டி இருந்தது. முதலில் சற்று சிரமமாகத் தோன்றினாலும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. சில நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்திருந்தனர். அவர்களது நோட்டுகளை வாங்கி அவற்றிலிருந்தவற்றை கொண்டு என்னால் முடிந்தவரை படித்து இருந்தேன்.
காலாண்டுத் தேர்வும் வந்தது. கணிதத் தேர்வில் எனது ஆமை வேகத்தால் ஐந்து மதிப்பெண் கேள்விகள் ஐந்தை எழுத முடியவில்லை. சரி பரவாயில்லை அப்பொழுதுதான் சேர்ந்து இருக்கிறோம்... யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கவலைப்படவில்லை.
அதுவரை விசாரித்து தெரிந்து கொண்டதில், வழக்கம் போல் முதல் மூன்று மதிப்பெண்களை மாணவிகள்தான் அங்கேயும் பெற்றுவந்திருக்கின்றனர். அப்போது எனது எண்ணம் முதல் மூன்றுக்குள் வருவது மட்டும்தான்...
கணித விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மேஜை மேல் வைக்கப் பட்டு இருந்தன. எழுபத்தைந்து மதிப்பெண்கள்தான் கண்டிப்பாக வரும் என்று நான் எண்ணியிருந்ததால் எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தேன்.
விடைத்தாள் கொடுக்கும்போது எல்லா வகுப்புகளிலும் நிச்சயமாக சில காமெடிகள் நடக்கும். விடைத்தாட்களை வரிசைப் படுத்தி ஒவ்வொருவருக்கும் பூஜையுடன் கொடுத்துக்கொண்டு இருந்தார்.முதலில் மதிப்பெண் இரண்டில் இருந்து ஆரம்பமாகி இருந்தது. சில மாணவர்களை கணித ஆசிரியர் ஓடிப் பிடித்து அடித்துக் கொண்டு இருந்தார். அந்த காட்சி இன்று நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அப்பொழுது மாணவர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சில உரையாடல்கள் இன்னும் சிரிப்பாக இருக்கும். எனது நண்பன் சரவணன் செய்த காமெடி இது...
ஆசிரியர் : இத்தன அடிஷனல் பேப்பர் எழுதியும் இருவத்தஞ்சு மார்க்குதான் தொர (வழக்கமாக சொல்வது) வாங்கமுடிஞ்சுதோ ?
சரவணன் : நீங்க மார்கே போடமாட்டீங்கறீங்க சார் !! நான் நெறைய எழுதி இருக்கேன் சார் !
ஆசிரியர் : ஆமாண்டா நீ நெறைய எழுதி இருக்க... நான்தான் மார்க் போடறதில்ல ! கொஸ்டின் பேப்பர்ல இல்லாத கேள்விக்கெல்லாம் நீ பதில் எழுதுனா உனக்கு எப்புடிடா நான் மார்க் போடுறது ?
சரவணன் : சார் நீங்கதான் எக்ஸாம் ஹால்ல தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் மொதல்ல விடை எழுத சொன்னீங்க !! நான் எனக்கு தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் பதில் எழுதிட்டேன் !!!
ஆசிரியர் : ???????????????
இப்படி பல காமெடிகளுக்கு பிறகு மூன்றாவது மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். நம்மள இன்னும் கூப்புடாததால எனக்கு ஒரு சந்தோசம். அப்பாடா ! நம்ம எய்ம் சக்சஸ் அப்படின்னு ! அந்த பொண்ணு ஐம்பதுதான் வாங்குச்சு !! ரொம்ப அட்வைஸ் பண்ணிட்டு, அது அழுக ஆரம்பிச்சதால விட்டுடாரு !
அடுத்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். அந்தப்பெண் உடனே அழ ஆரம்பித்துவிட்டாள். என்னடா இது இப்படி இருக்காங்க அப்படின்னு நினைச்சேன். அந்தப்பெண் ஐம்பத்தி இரண்டு வாங்கி இருந்தாள் ! மீண்டும் அட்வைஸ் ! அடுத்ததாக இரண்டாம் மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். ஐம்பத்தியாறு வாங்கி இருந்தாள் ! மீண்டும் அட்வைஸ் ! ஆனால் அவள் மற்றவர்களை மாதிரி அழவில்லை ! அடுத்த முறை அதிக மதிப்பெண்கள் பெறுவதாக சொல்லிவிட்டு அவளது இருக்கையில் அமர்ந்தாள். சற்று தைரியமான பெண் என்று அவளை பார்த்தாலே தெரியும்.
இன்னும் அவர் என்னை அழைக்கவில்லை. நானும் அவர் என்னை அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன், ஆனால் என்னை அவர் கண்டு கொள்ளவே இல்லை. நானாக அவரிடம் எனது விடைத்தாள் பற்றிக் கேட்டேன். அவர் வகுப்பு முடியும் பொழுது தருவதாகக் கூறினார். நானும் சரி என்று விட்டுவிட்டேன். சிறிது நேரத்திற்கு பிறகு மாணவிகள் பக்கம் அழுகை நின்றிருந்தது. என்னை ஆசிரியர் அழைத்தார்.
எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோசம் ! ஆகா ஆரம்பமே அசத்தலா ஆரம்பிக்குதுன்னு.. நாம வேற பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டோம்!! நெறைய பிகர் இருக்கே, எத நம்ம ஆளா செலக்ட் பண்ணலாம் அப்படின்னு சைடுல ஒரு காட்சி ஓடிகிட்டு இருந்தத அப்படியே நிறுத்திட்டு சார் பக்கத்துல போனேன்.
எவ்வளவு மதிப்பெண் எதிர்பார்க்கிறாய் என்றார். நானும் எழுபத்தைந்து எதிர்பார்க்கிறேன் என்றேன். பேப்பர்ல சரியாய் எழுபத்தைந்து இருந்தது. மகிழ்ச்சியுடன் பேப்பர் வாங்க கை நீட்டுனா, பேப்பர ஓரமா வச்சுட்டு எதையோ தேடுனாரு ! நான்கூட அட அதுக்குள்ள பரிசு எதாவது குடுக்கப் போறாருன்னு மனசுக்குள்ள கோட்டையெல்லாம் கட்டி, பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சார் அப்படின்னு வாய தொறக்கறதுக்குள்ள , கொத்து குண்டு போட்டு கோட்டையவே தரைமட்டம் ஆக்கிட்டாரு !
பெரம்ப எடுத்து வச்சாரு பாருங்க ஒன்னு !! "எங்கடா போச்சு மீதி இருவத்தஞ்சு ?" அப்படினாரு. கொஞ்ச நேரம் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ! அப்புறம் அப்படியே தலைய தொங்க போட்டுக்கிட்டு வந்து என்னோட எடத்துல செட்டில் ஆயிட்டேன். என்னடா எல்லார் முன்னாடியும் இப்படி அடிச்சுட்டாரு அப்படின்னு ஒரே பீலிங் ஆயிருச்சு !!
அப்புறம் ஈவினிங் தனியா கூபிட்டாரு. ஆகா தல தனியா வீடு கட்டபோறாறு போல அப்படின்னு கொஞ்சம் பயத்தோட போனேன்.
பாராட்ட ஆரம்பிச்சுட்டாரு ! என்னால நம்பவே முடியல ! அப்புறம் சொன்னாரு, "எல்லாரு முன்னாடியும் உன்ன பாராட்டுனா, நல்லா படிகுறவங்க அப்புறம் அவுங்க நண்பர்கள் எல்லாரும் உன்ன எதிரி மாதிரி நினைச்சுருவாங்க ! உனக்கும் அது ஒரு மாதிரி இருக்கும். நான் உன்ன அடிச்சதால, எல்லாருக்கும் மொத மார்க் எடுத்தா மட்டும் போதாது, நூறு மார்க் எடுக்கணும் அப்படின்னு ஒரு எண்ணம் வரும்."
கடைசியா நல்லா வேகமா எழுத பழகச்சொன்னாரு !
இன்னும் தொடரும்.....
No comments:
Post a Comment