காதலும் கதிரவன்தான்...
ஆனால் எப்போது தோன்றும் ?
எப்போது மறையும் ? என்று
உறுதியாகச் சொல்லமுடியாது..
காதலினால் இணைந்த இதயங்கள் பல..
ஆனால் சிதைந்த இதயங்கள் ?
எண்ணிலடங்காது..
காதலன் முதலில் கவிஞனாவான்..
கவிஞன் பிறகு பைத்தியமாவான்..
இந்த சுழலில் சிக்காதவன் கணவனாவான்...
ஆனால் யாருக்கு என்று மட்டும் தெரியாது..
காதலி மட்டும் ஏனோ அதிகம்
கவி பாடுவதில்லை.. காதலர்களைப்
போல் வெளிப்படையாய்..
மற்றபடி சுழலின் பிற நிலைகள்
இவர்களுக்கும்தான்..
காதல் தோல்விகளினால்
கல்லறை கதவுகளும், மதுக்கடை கதவுகளும்
மட்டும்தான் திறக்கப்பட வேண்டுமா ?
மனக்கதவுகளும் அறிவுக்கண்களும்
திறக்கப்படக்கூடதா ?
நேற்றைய காதலர்களே! நிலையற்ற
இந்த வாழ்வில் உங்கள் மனங்களை
நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்...
இருபது வருடம் பாசமுடன் வளர்த்த
பெற்றோரை (து)மறக்கும் போது
சாகத் துணியாத, நிலை பிறழாத நீங்கள்,
இரண்டு மாதம்(வருடம்) காதலித்த
(ஆ)பெண்ணிற்காக சாகத் துணிவதும்
நிலை பிறழ்வதும் எப்படிச் சாத்தியமாகின்றன ?
உண்மை காதல் என்று இதற்கு
விளக்கம் கூறி, உங்களது மனம் அறிவை
ஏமாற்றுவதை உணருவதில்லை நீங்கள்.
இங்கு நமக்கு கொடுக்கப்பட்ட நேரம்
காதலிக்க மட்டுமன்று..
கடமைகளையும் காணத்தான்..
காதலித்துப் பாருங்கள்! உங்கள்
கடமைகளை! கைகூடும் நீங்கள்
நினைக்காத காதலும் கூட..